Aiyur Agaram

அய்யூர் அகரம் எனும் அழகிய ஊரில் ஆலயம் கொண்டிருக்கும்

ஸ்ரீ பூரண புஷ்கலாம்பாள் சமேத அபிராமேஸ்வரர் துதி

மெய்யூர் நலவழக்காய் மேன்மைக் குலவிளக்காய்
பொய்யூர் பிணியழிக்கும் பொறையாய் – அய்யூர்
அகரத்தான் நாமத்தை அபிராமேஸ் வராஎனவே
பகரத்தான் பாவம் கெடும்!

பூரணமே புஷ்பகலா பூஷணியின் திருக்கூட்டே
காரணமே கல்பதருக் கற்பகமே – சூரணமே
அய்யா அபிராம ஈஸ்வரனே என்றடைய
மெய்யா யினியாவும் மேல்!

கூடினோம் அகரத்தின் குலவிளக்கின் அருட்சுடரை
நாடினோம் அபிராமர் நற்கருணை – பாடினோம்
கும்பாபி ஷேகத்தால் குளிர்ந்தமனம் இளகட்டும்
எம்பாவம் போகும் இனி!

கையூ ழகல வெய்யூழ் விலக செய்யூ – யாவும் நலமாக
துய்யூ ரிதய துயரூ றகலத் துரீயூர் – ஞானம் புலனாக
அய்யூ ரகர மெய்யூர் பகல பெய்யூ – ரமிர்த முகிலான
அய்யா அபிரா மேசா ஈசா நெய்வா- யிதயம் சுகமாக!

ஸ்ரீ முத்தாம்பிகை சமேத அபிராமர் துதி

சிறப்பாக, சுவாமி சந்நிதிக்கு எதிராக அன்னையின் சந்நிதி இருப்பதை வியந்து பாடியது

பாதிஉன தானமஹா பரசக்தி வடிவத்தைப்
பக்கத்தில் வைத்தாலவள்
பார்வைகடைக் கண்ணென்றோ பரசிவனே மாதாவைப்
பார்க்கநீ எதிரில்வைத்தாய்!
ஆதியனே, அபிராம ஈஸ்வரனே ஸ்ரீமுத்து
அம்பிகையின் தரிசனத்தால்
அய்யூர் அகரத்தில் மெய்யூறத் தருவித்து
அருளுமுன் கரிசனத்தால்
வேதியரின் ஸ்ருதியும்துதி ஓதியவர் நிதியும்
வெகுவான நன்மக்களின்
வினயமும் அன்புமினி விளையும்நல் விதியும்
விதைத்தெமை வளரவைப்பாய்!
ஜோதியனே, சுந்தரனே, சுதரூப சாஸ்தாவே
சொல்லொணாப் பெருநிதியமே!
சோதனை ஏன்மனதின் வாதனை தீர்த்துனது
சொந்தமெனை ஆட்கொள்ளுவாய்!
கையூறப் பதுமநிதி கனிந்தூறத் தருமநெறிக்
கைங்கர்யம் ஆற்றும் வரமும்
கலையறிவும், புலனுயர்வும், உலகுயற நிலவுமறை
கற்றவரைப் பற்றும் திறமும்,
பையூற அன்னமய பிராணமன ஞானசுகப்
பஞ்சமய கோசம் தாண்டும்,
பரஞான வடிவான சுபயோக அனுபூதி
பரிசாக அடைய வேண்டும்!
மெய்யூறத் தவயோக மேலான சித்திகளும்
மேவினி யான் இனியனாய்
மேதினியில் புனிதமென வேதியருள் திலகமென
மெய்ப்பட்டு விளங்க வேண்டும்!
அய்யூர் அகரத்து ஐயனே, அமிர்தீசா,
ஹரிஹர சுத ரூபனே,
அபயமுன தருளடியே, சுலபமினி மேலருளே
அபிராம குல விளக்கே!

மீ. ராஜகோபாலன்

Related Posts

Share this Post

Leave a Comment