Shivanandalahari – Verse 36

36 – ஆலயம் ஆகுமுடல் ஆள்விப்பான் அடி போற்றி!

भक्तो भक्तिगुणावृते मुदमृतापूर्णे प्रसन्ने मनः
कुम्भे साम्ब तवाङ्घ्रिपल्लवयुगं संस्थाप्य संवित्फलम् |
सत्वं मन्त्रमुदीरयन्निजशरीरागारशुद्धिं वहन्
पुण्याहं प्रकटीकरोमि रुचिरं कल्याणमापादयन् ||३६ ||
ப₄க்தோ ப₄க்திகு₃ணாவ்ருதே முத₃ம்ருதாபூர்ணே ப்ரஸன்னே மன:
கும்பே₄ ஸாம்ப₃ தவாங்க்₄ரிபல்லவயுக₃ம் ஸம்ஸ்தா₂ப்ய ஸம்வித்ப₂லம் |
ஸத்வம் மந்த்ரமுதீ₃ரயன்னிஜஶரீராகா₃ரஶுத்₃தி₄ம் வஹன்
புண்யாஹம் ப்ரகடீகரோமி ருசிரம் கல்யாணமாபாத₃யன் ||36 ||
பக்தியிழை நூலையுற்று சுத்தநிறை நீரையுற்று
தத்துமொளி யாகவுற்று – மனமான
குத்துவிளக் கானகுடம் அத்துவித மானபதம்
மெத்தப்பதி மாவிலைநல் – மதியாக
நட்டசுபத் தேங்கனியும் நற்குணத்தி லேவிளையும்
நத்திருவின் நாமஜபம் – நயமாக
தொட்டுவுடற் தூய்மையுற இட்டவுமை யாள்சிவனே
வட்டிலுனை யேவருடி – வரவேற்பேன்!
(36)

பக்தியாகிய நூலினால் சுற்றப்பட்டும், நிறைவு எனும் நந்நீரினால் நிரப்பப்பட்டும், ஒளி மிக்கதாயும் விளங்கும் எனது மனமாகிய குடத்தில், உமது திருவடிகளாகிய மாவிலைகளைப் பதித்து, மேன்மையான ஞானமாகிய தேங்காயை வைத்து, சிறப்பான மந்திரமாக நற்குணங்களைத் தியானித்து, மெய்யாகும்படியாக எனது மெய்யினைச் சுத்தப்படுத்த, மனதில் நல்ல மகிழ்ச்சியைத் தேடுபவனாக, (என்னுடலாகிய நினது கோவிலுக்கு) நந்நீராட்டு வரவேற்பினைச் செய்கின்றேன்.

குறிப்பு:
வீட்டினைச் சுத்திகரிக்கச் செய்கின்ற புண்யாஹவாசனம் போன்றதே, உடலாகிய ஆலயத்தைச் சுத்தம் செய்து, அங்கே ஆன்மாவாய் விளங்கும் பரம்பொருளை ஆராதித்தல் எனும் பெரும் தவம்.

தன்னுள் விளங்கும் தகைமையே கடவுள் எனும் அறிவும், உணர்வும் வந்தாலே, தன்னுடைய வல்லுடல், மெல்லுடல், காரண உடல் என இம்மூன்றும் சுத்தப்படும். அதனால் சத்தியப் பெரு ஒளி உள்ளே துலங்குதல் தெளியும்.

இறைச் சிந்தனையாலும், இறைவன் நாம ஜபத்தினாலும், மனம், மதி, வாக்கு, மூச்சு, செயல் என எல்லாமே சுத்திகரிக்கப்படுகின்றன. இறைவன் இருக்கும் ஆலயமே உடல் என்பது உணரப்படுவதால், நல்லுணவும், நற்பயிற்சியும் வல்லுடலைப் புதுப்பிக்கும். நற்குணமும், நல்லமைதியும் மெல்லுடலைப் புதுப்பிக்கும். நற்சிந்தனையும், நல்லறிவும் காரண உடலை நல்வினைகளால் புதுப்பிக்கும். அதனால் உடலானது ஆன்மா லயிக்கின்ற ஆலயமாக ஒளிர்விடும். இதுவே இப்பாடலின் உட்கரு. (36)

35 – உள்ளத்துள் உள்ளுயிர்த்து உள்ளான் அடி போற்றி!

37 – கடைந்தடையும் பேரமுதக் கற்பகத் தரு போற்றி!

Share this Post

Leave a Comment