Shivanandalahari – Verse 48

48 – சித்தம் தெளிவிக்கும் சிவஞானச் சுனை போற்றி!

नित्यानन्दरसालयं सुरमुनिस्वान्ताम्बुजाताश्रयं
स्वच्छं सद्द्विजसेवितं कलुषहृत्सद्वासनाविष्कृतम् |
शंभुध्यानसरोवरं व्रज मनो हंसावतंस स्थिरं
किं क्षुद्राश्रयपल्वलभ्रमणसंजातश्रमं प्राप्स्यसि ||४८ ||
நித்யானந்த₃ரஸாலயம் ஸுரமுனிஸ்
வாந்தாம்பு₃ஜாதாஶ்ரயம்
ஸ்வச்ச₂ம் ஸத்₃த்₃விஜஸேவிதம்
கலுஷஹ்ருத்ஸத்₃வாஸனாவிஷ்க்ருதம் |
ஶம்பு₄த்₄யானஸரோவரம் வ்ரஜ
மனோ ஹம்ஸாவதம்ஸ ஸ்தி₂ரம்
கிம் க்ஷுத்₃ராஶ்ரயபல்வலப்₄ரமண
ஸஞ்ஜாதஶ்ரமம் ப்ராப்ஸ்யஸி ||48 ||
நித்தசுகப் பேரமுதாய் புத்தரகப் பூமனதாய்
தத்துமிடமே யழகாய் – தகையாக
உத்தமர்க ளாய்ப்பறந்து சுத்தமடை வார்சிறந்து
மொத்தமழுக் கானதுயர் – முடிவாக
புத்தசுக மானகலை சித்தசிவத் தியானநிலை
பக்தியடை வாய்மனது – பதராக
குட்டையுழ லாகநிலை கெட்டுலக மாயவலை
கட்டிடரைக் காணுவதும் – எதனாலே
(48)

நிலையான சுகமாகிய நீரால் நிரம்பியதும், தூயவரின் மனமாகிய மலர் பூப்பதற்கான ஆதாரமானதும், சிவனடியார்களாகிய பறவைகளால் விரும்பி அடையப்படுவதும், தவறாகிய வினையழுக்கைக் களைவதும் ஆகிய சிவசக்தியின் தியானமாகிய நந்நீர்நிலையை அன்னமாகிய மனமே, நீ சென்று அடைவாயாக! (அதை விட்டு), பயனற்ற குட்டையில் உழல்கின்ற துயரத்தை ஏன் அடைந்து இருக்கிறாய்?

குறிப்பு:
ஶிவானந்த₃லஹரீயின் மூலம் எது?

அது சிவசக்தி தியானமெனும் நந்நீர் ஏரியே ஆகும். அதிலேதான், அறவோரின் மனம், நறுமலராகப் பூக்கிறது. அந்த நந்நீரை அடையவே, எல்லா அடியார்களும் விரும்புகின்றார்கள். அதில் நனைவதால், நம்மில் ஒட்டி இறுகும் பாவமாகிய அழுக்குப் பிழைகள் எல்லாம் நம்மை விட்டு அகல்கின்றன.

நம் மனது, அன்னப்பறவைக்கு உவமானம் சொல்லப்பட்டது. அன்னப்பறவை அல்லன அகற்றி நல்லன எடுக்கும் திறன் கொண்டது. அது போலவே, சக்தியும் சேறுமாய் கிடக்கும் உலக ஆசைகள் எனும் குட்டையில் (அதாவது, அதர்மம் அல்லது அறமற்ற வாழ்க்கை எனும் பாவப் பள்ளத்தில்), ஏன் மனம் கிடந்து துயரப்பட வேண்டும், அதை விட்டு, ஶிவானந்த₃லஹரீ எனும் நற்சுக நீர்ப்பரப்பில் நனைந்திருக்கலாமே என்பதைத்தான் இப்பாடல் கேட்கிறது. (48)

47 – சிந்தைப் பூந்தோட்டச் சிவஞானக் கனி போற்றி!

49 – முனையன்புக் கொடிகனிந்த முக்தி மழை போற்றி!

Share this Post

Leave a Comment