Shivanandalahari – Verse 58

58 – கதிர் கிரணக் கோடியெனக் காட்டும் எழில் போற்றி!

एको वारिजबान्धवः क्षितिनभो व्याप्तं तमोमण्डलं
भित्वा लोचनगोचरोऽपि भवति त्वं कोटिसूर्यप्रभः |
वेद्यः किन्न भवस्यहो घनतरं कीदृग्भवेन्मत्तम-
स्तत्सर्वं व्यपनीय मे पशुपते साक्षात् प्रसन्नो भव ||५८ ||
ஏகோ வாரிஜபா₃ந்த₄வ: க்ஷிதினபோ₄
வ்யாப்தம் தமோமண்ட₃லம்
பி₄த்வா லோசனகோ₃சரோ(அ)பி ப₄வதி
த்வம் கோடிஸூர்யப்ரப₄: |
வேத்₃ய: கின்ன ப₄வஸ்யஹோ க₄னதரம்
கீத்₃ருக்₃ப₄வேன்மத்தம-
ஸ்தத்ஸர்வம் வ்யபனீய மே பஶுபதே
ஸாக்ஷாத் ப்ரஸன்னோ ப₄வ ||58 ||
ஒருகதி ரவனிருள் வதிகவிழ் புவிமிசை
அருவழித் தினமொளி வருவெளிப் படுதிடம்
பரசிவப் பெரும்பொருள் பலகோ டிக்கதிர்
கரகிர ணஒளியென் கண்படல் அரிதேன்?
ஒருவே ளைகுறை மதியிருள் பெரிதோ
ஓ எனதந்தோ உயர்த்தொளி அரிதோ
அதுஅட வாயினும் அழித்திருள் நீக்கி
முதல்வர விழிமுன் முகிழ்த்துடு ஒளியே
(58)

ஒரே கதிரவன், வானத்தையும் பூமியையும் மூடியிருக்கும் இருளைக் கிழித்து கண்முன்னே தெரிகிறது. (அப்படி இருக்க) கோடிக் கதிரவனாய் ஒளிவீசும் தாங்கள் ஏன் என் கண்களால் அறிய முடியாதவராக இருக்கிறீர்கள்? அந்தோ! (அப்படியானால்) என்னுடைய அறியாமைதான் எத்தனை அடர்த்தியாக அடைத்துக் கொண்டிருக்க வேண்டும்! அவற்றை நீக்கி என் கண்முன்னே தோன்றும் ஓளியாகத் தாங்கள் வர வேண்டும்.

குறிப்பு:
கண்ணுக்குத் தெரியும் பொருள் எல்லாம், கதிரவன் அளித்த ஒளியாலும் அதன் பயனாலுமே அறியப்படுகின்றது. பல கோடிக் கதிரவனைப் போன்ற ஒளியாக விளங்குவது பரமாத்மா அல்லவா! அந்த ஓளியை நம்மால் எப்படிப் பார்த்து அறிய முடியும்! ஆத்மாவாக, அனைத்தையும் அறிய வைக்கும் ஒளியாக, நம்முள்ளேயே பிரகாசித்துக் கொண்டிருக்கும் பேரொளியினை நாம் எப்படிக் காண்பது? அவ்வொளியாகவே நாம் இருப்பதை உணர்வதால் மட்டுமே, நம்மால் அதனை அடைய முடியும். ஆனால் அதற்குத் தடையாக அறியாமையாகிய இருள் நம்முள் இருக்கிறது.

அந்த அறியாமையாகிய இருளை விரட்டும் அக விளக்காக, ஆண்டவன் மனதுள் சுடர் விடவேண்டும் என பகவான் ஆதி சங்கரர் இப்பாடலில் பிரார்த்திக்கிறார்.

ஆன்மனைத் தன்னுள் அறிவாக உணர்வதே அனுபூதி. அவ்வறிவானுபூதிக்கு இறைவனின் கருணை மிகவும் இன்றியமையாதது. அதனாலேயே, ஞானம் பக்தியின் முழுமை என்றும், பக்தி ஞானத்தின் முழுமை என்றும் பெரியோர்களால் விளக்கப்பட்டது. (58)

57 – எல்லோர் உள்ளிருக்கும் ஏற்றம் அடி போற்றி!

59 – நோக்கும் மனத்தின் நுணுக்கன் அடி போற்றி!

Share this Post

Leave a Comment