Shivanandalahari – Verse 64

64 – தாளுறையாய்க் கடிமனதைத் தந்தேன் அடி போற்றி!

वक्षस्ताडनमन्तकस्य कठिनापस्मारसंमर्दनं
भूभृत्पर्यटनं नमस्सुरशिरःकोटीरसंघर्षणम् |
कर्मेदं मृदुलस्य तावकपदद्वन्द्वस्य गौरीपते
मच्चेतोमणिपादुकाविहरणं शंभो सदाङ्गीकुरु ||६४ ||
வக்ஷஸ்தாட₃னமந்தகஸ்ய கடி₂னாபஸ்மாரஸம்மர்த₃னம்
பூ₄ப்₄ருத்பர்யடனம் நமஸ்ஸுரஶிர:கோடீரஸங்க₄ர்ஷணம் |
கர்மேத₃ம் ம்ருது₃லஸ்ய தாவகபத₃த்₃வந்த்₃வஸ்ய கௌ₃ரீபதே
மச்சேதோமணிபாது₃காவிஹரணம் ஶம்போ₄ ஸதா₃ங்கீ₃குரு||64||
வல்லிய காலக னுள்ளிய மார்பக
மல்லறி யாதழி – மிதிபாதங்
கல்லடி யாமலை செல்லம ரார்சிர
வுள்ளணி மாகுட – முடிகூடும்
மெல்லிய தாமித முள்ளருந் தேவடி
நல்லிய தாய்திரு – வடியேயென்
உள்ளிய மாமணி யுன்செருப் பாயணிச்
செவ்விய மாயினி – சிவசம்போ
(64)

வலிய காலனின் மார்பில் உதைத்தல், அறியாமையாகிய கடின நோயினை மிதித்தல், கரடுமுரடாகிய மலைகளில் நடத்தல், பணிகின்ற தேவர்கள் அணியும் மணி மகுடத்தில் பதித்தல் ஆகிய இச்செயல்கள் எல்லாம் தங்களுடைய மென்மையான இரு திருவடிகளுக்கும் கடமையாக உள்ளது. (அதற்கு உதவ) சம்போ, எப்போதும், எனது மனதை நினது மாணிக்க மிதியடிகளாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

குறிப்பு:
நமது மனம் இறைவனின் கால்களுக்கு மிதியடி ஆவதால் என்ன பயன்?

அதனால், மனம் பயம் அற்று, எல்லாப் பயனும் அடையும். ஏனெனில், இறைவனது கால்கள் எமனை உதைப்பதால், மரண பயம் ஒழிகிறது. ஆணவ மலத்தின் அடையாளமான முயலகனை மிதிப்பதால், ‘நான்’ எனும் செருக்கு நம்மை விட்டுப் போகிறது. மலைகளில் இறைவனின் திருவடிகளில் நடப்பதாலும், நடமாடுவதாலும், திட உறுதி கிடைக்கிறது. எல்லாச் சுகங்களும் அனுபவிக்கும் தேவர்களின் தலைகளில் பதிக்கப்படும்போது, தேவலோக இன்பங்களும் நிலையற்று என்பது தெளிகிறது. அதனால் பரசிவ சுக வெள்ளத்திலேயே இருக்கும் பயன் கிடைக்கிறது.

அதனால்தான், இறைவன் கால்களுக்குச் செருப்பாய் மனம் இருப்பதே சிறப்பு என இப்பாடலில் காட்டப்பட்டது. (64)

63 – எவ்வழியும் செவ்வழியாய் ஏற்பான் அடி போற்றி!

65 – அடிபணியத் திருவருளும் அய்யன் அடி போற்றி!

Share this Post

Leave a Comment