Shivanandalahari – Verse 66

66 – ஆட்டிவிளை யாடுகின்ற அத்தன் அடி போற்றி!

क्रीडार्थं सृजसि प्रपञ्चमखिलं क्रीडामृगास्ते जनाः
यत्कर्माचरितं मया च भवतः प्रीत्यै भवत्येव तत् |
शंभो स्वस्य कुतूहलस्य करणं मच्चेष्टितं निश्चितं
तस्मान्मामकरक्षणं पशुपते कर्तव्यमेव त्वया ||६६ ||
க்ரீடா₃ர்த₂ம் ஸ்ருஜஸி ப்ரபஞ்சமகி₂லம் க்ரீடா₃ம்ருகா₃ஸ்தே ஜனா:
யத்கர்மாசரிதம் மயா ச ப₄வத: ப்ரீத்யை ப₄வத்யேவ தத் |
ஸ₂ம்போ₄ ஸ்வஸ்ய குதூஹலஸ்ய கரணம் மச்சேஷ்டிதம் நிஸ்₂சிதம்
தஸ்மான்மாமகரக்ஷணம் பஸு₂பதே கர்தவ்யமேவ த்வயா ||66||
ஆதிமுத லானவுல காதும்விளை யாடவுயி
ரானபொரு ளாவுமுன – தருளாலே
யாதுமென தானசெய லாதுமுன தாகவுயர்
வானதருங் காதலறி – வதனாலே
ஓதியடி யாரவருட் சேதனமுற் சாகம்விளை
யாடும்முத லாளியது– வெகுதிண்ணம்
நாதமுத லானவுயிர் நாயகனே ஏழையெனை
ஆளுங்கட னாமுடனே -அடைப்பாயே
(66)

திருவிளையாடலாய் உலகங்களை எல்லாம் படைப்பதும், படைத்த உயிர்களை விளையாட்டுப் பொருளாய்க் கொள்வதும் உமது இயல்பு. (ஆகையால்) எனது செயல்கள் எவையோ, அவை யாவும் நினது அன்பினாலேயே நடத்தப்படுன்றன. என்னை ஆட்டுவித்தலும், நினது அடியார்களின் ஆனந்தமும், நின் திருவிளையாடல்தான் என்பது மிகத் திண்ணம். ஆதனால், உயிர்களின் தலைவரே, என்னைக் காத்து அருளல் என்பது, உம்மால் செய்யப்பட வேண்டிய கடமையே ஆகும்.

குறிப்பு:
ஆக்கியும், மாற்றியும், அழித்தும், மறைத்தும், அணைத்தும், அருள்கின்ற இறைவனின் செயலினாலேயே எல்லா உலகங்களும் உயிர்களும் அமைகின்றன. இச்செயல் நடந்து கொண்டே இருப்பதாலும், இதன் மூல காரணம் நம்மால் அறியப்பட முடியாது அமைவதாலும், அனைத்தும் இறைவனின் திருவிளையாடல் என்று ஏற்பதே வழி என அருமறைகள் பறைகின்றன.

அப்படியானால், எனது செயலும், என்னைச் செய்யுமாறு ஆட்டுவிப்பதும், இறைவனின் திருவிளையாடல் என்றுதானே ஆகிறது! அப்படியானால், நான் எதற்கு அஞ்ச வேண்டும்? அல்லன, நல்லன என எது நடப்பினும், அதனை ஏற்று, திருவிளையாட்டில், சிறுபணியாற்றும் பொம்மையாகவே யான் இருந்து விட்டுப் போகிறேனே!

இவ்வாறு எல்லாம் எண்ணிப் பார்ப்பதால், பக்தன் உலகில் விளையும் எல்லாச் செயலுக்கும், விளைவுக்கும் தான் ஒரு சாட்சியாக மட்டுமே இருந்து கொண்டு, மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வைக் கழிப்பான். அந்த அறிவினால், விளையாட்டுப் பொம்மைகளான நம்மைப் பாதுகாப்பது விளையாடும் இறைவனின் கடமையே எனத் தெளிகிறோம். அதனால், காக்கும் கடனை (உடனடியாக) அடைப்பது கடவுளின் பொறுப்பு என உறுதி கொண்டு, வாழ்க்கையை விளையாட்டாய் எடுத்துக் கொள்வதே அறிவார்ந்த செயல். (66)

65 – அடிபணியத் திருவருளும் அய்யன் அடி போற்றி!

67 – சிவஞானத் தியானமருள் சீலன் அடி போற்றி!

Share this Post

Leave a Comment