Shivanandalahari – Verse 67
67 – சிவஞானத் தியானமருள் சீலன் அடி போற்றி!
स्फुटपुलकाङ्कितचारुभोगभूमिम् |
चिरपदफलकाङ्क्षिसेव्यमानां
परमसदाशिवभावनां प्रपद्ये ||६७ ||
ஸ்பு₂டபுலகாங்கிதசாருபோ₄க₃பூ₄மிம் |
சிரபத₃ப₂லகாங்க்ஷிஸேவ்யமானாம்
பரமஸதா₃ஸி₂வபா₄வனாம் ப்ரபத்₃யே || 67 ||
வருக மிகமகிழ – அதுவாக
புகல அகலவுடற் புரள மிகவுமயிர்ப்
புலரச் சிலிர்த்துயரப் – புலமாகி
பகலத் தகையவிழப் பிறவித் தடையகலப்
பயணப் பயனதனை – மிகவேண்டிப்
பதியப் படையுமிகை அடையப் பரசிவனின்
பதங்கள் புகலெனவே – பணிவேனே
(67)
பலவிதமான மகிழ்ச்சி பெருகவும், அம் மகிழ்ச்சியால் கண்ணீர் சிந்தவும், வெளியே தெரியும்படியாக உடலின் மயிர்க்கால்கள் எல்லாம் சிலிர்க்கவும், நற்பயனை விளைக்கும் நிலமானதும், முக்தியைத் தேடுபவர்களால் வணங்கப்படுவதுமான, சக்தியாகிய அன்னையுடன் கூடி விளங்கும் ஸதாசிவமாகிய பேருண்மையைப் பணிகின்றேன்.
குறிப்பு:
எல்லாம் இறைவன் திருவிளையாடலே என உறுதி அடைந்த மனம், யாவும் இறைவனால் நிறைக்கப்பட்ட பொருளே எனப் பார்க்கின்றது. அப்படிப் பார்ப்பதனால், (முன்பு சாதாரணமாகத் தெரிந்த) இயற்கையின் எல்லா மாற்றங்களும், இனிமேல் மனதை வெகுவாக ஈர்க்கின்றன. அதனால் சொல்ல முடியாத வியப்பு, நாம் உலகில் பார்க்கும் எல்லாவற்றிலும் விளைகிறது.
அதற்கெல்லாம் காரணமான திருவடிகளை மனக் கண்ணால் நோக்கும் போது, எல்லா வியப்புக்களும் நம்முள்ளே பணிவையும், வார்த்தைக்குள் அடங்கா வணக்கத்தையும் தோற்றுவிக்கின்றன. எத்தகைய பெரும்பயன் மனிதப்பிறவிக்குக் கிடைத்திருக்கிறது என்ற தெளிவும், நன்றியும் வருகிறது. அதனால் மனமும், உடலும் ஆனந்தத்தால் திக்குமுக்காடியும் சுகத்தில் திளைக்கின்றன.
துயரம், கவலை என்று எண்ணியிருந்த நிலைகள்கூட, இனிமேல் அனுபவித்து ரசிக்க வேண்டிய பயன் என்றே ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கிடைக்கிறது.
அத்தகு அனுபவ இன்பம், வார்த்தைகளால் கோர்க்கப்படக் கூடியதா என்ன! (67)