Shivanandalahari – Verse 87

87 – திருவடியைக் காட்டித் தீர்விப்பான் அடி போற்றி!

अशलं गरलं फणी कलापो
वसनं चर्म च वाहनं महोक्षः |
मम दास्यसि किं किमस्ति शंभो
तव पादाम्बुजभक्तिमेव देहि ||८७ ||
அஸ1னம் க3ரலம் ப2ணீ கலாபோ
வஸனம் சர்ம ச வாஹனம் மஹோக்ஷ: |
மம தா3ஸ்யஸி கிம் கிமஸ்தி ஸ1ம்போ4
தவ பாதா3ம்பு3ஜ ப4க்திமேவ தே3ஹி ||87 ||
நினதுணவு ஆலவிடம் நினதுஅணி யாயரவம்
நினதுவுடை யாயுரிசம் – நெடுமாடு
நினதுஇட மாயமரும் நினதுதட மாயுலவும்
நினதுபொரு ளாயருள – இனியேது
எனதுறவு ஆகவரம் அருளுமுன தானவளம்
எதுவுனது ஆனதுரை – சிவசம்போ
நினதுபத மானமலர் எனதுமன மாகவளர்
பயனுமது வாகவருள் – பரமேசா
(87)

சிவ சம்போ, ஆலகால விடமே உங்களுக்கு உணவு. அரவங்களே அணிகலன். (விலங்குகளின்) தோலே ஆடை. (அமரவும், கூட்டிச் செல்லவும் இருக்கும்) வாஹனம் காளை மாடு. (அப்படிப்பட்ட வறியவனாகத் தோன்றும்) தாங்கள் எனக்கு எதை அளிக்கப் போகிறீர்? என்ன இருக்கிறது உம்மிடம்? (அதனால்) உங்கள் தாமரை மலர்களான திருவடிகளில் என் மனதினை இருத்தும் பக்தியை (அபயமாக) அருள்வீராக!

குறிப்பு:
85, 86-ம் பாடல்களில், பரசிவனைத் துதிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டு விட்ட பக்தன், இப்பாடலில், பரசிவனிடம் எதைக் கேட்பது என்று யோசித்து, யாசிப்பதாகப் பகவான் ஆதி சங்கரர் காட்டுகின்றார்.

எளியனாய் இருக்கும் பரம்பொருளிடமே எல்லாமும் இருக்கிறது. காமதேனு, கற்பக மரம், சிந்தாமணி என எல்லாச் சுகங்களும் இருக்கின்றன.

இருப்பினும், உள்ளுவதுள்ளல் உயர்வுள்ளல் என்றபடி, அடைய வேண்டிய பொருளை மிகவும் உயர்வானதாகத் தேர்வு செய்து கொள்வதே அறிவுடமை. எனவேதான், நிலையான பரசுக வெள்ளத்தில் நனைக்கக் கூடிய பரம்பொருளின் திருவடிகளையே பரிசாகக் கேட்கிறது இப்பாடல். (87)

86 – துதித்துணர அருள்பரவும் தூயன் அடி போற்றி!

88 – தன்னுள்ளே தனையுணரத் தருவான் அடி போற்றி!

Share this Post

Leave a Comment